வட மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிட திமுக திட்டம்!
இது தொடர்பாக தனது கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு கோஷ்டியினருடனுன் இந்தக் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தக் கூட்டத்தை இளங்கோவனின் ஆதரவாளர்கள் புறக்கணித்து வருகின்றனர். அதே நேரத்தில் மற்ற கோஷ்டியினர் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை திமுகவிடம் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐவர் குழுவிடம் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ராகுலின் ஆதரவு இருப்பதால் தனி ஆவர்த்தனம் நடத்தி வரும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தனியாக ஒரு 90 தொகுதிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு அனுப்பிவிட்டு, அதன் காப்பி ஒன்றை ஐவர் குழுவிடம் தந்து, இவை தான் காங்கிரஸ் வெல்லும் தொகுதிகள்.. இதைக் கேட்டு வாங்குங்கள் என்று கூறிவிட்டார்.
ஆனால், யதார்த்தத்தை உணர்ந்தவர்களான ஐவர் குழுவைச் சேர்ந்த ப.சிதம்பரம், வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் திமுகவுடன் தீவிர ஆலோசனைகளை தொடங்கிவிட்டனர்.
மாவட்ட நிர்வாகிகள், கோஷ்டிகளுடன் பேச்சு நடத்திக் கொண்டே திமுக தரப்புடனும் இந்தக் குழு சீரியஸ் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டது.
கூட்டணிக்கு பாமக வருவது இல்லாதது குறித்து பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளன திமுகவும் காங்கிரசும்.
அதே நேரத்தில் வட மாவட்டங்களில் பாமக இல்லாமலேயே, விடுதலைச் சிறுத்தைகள் உதவியோடு பெரும்பான்மையான இடங்களில் வென்றுவிட முடியும் என்று திமுகவுக்குக் கிடைத்த உளவுப் பிரிவு ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் இதே போல ஒரு ரிப்போர்ட் திமுகவிடம் தரப்பட்டது. அதில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக 7 இடங்களிலும் மண்ணைக் கவ்வும் என்று கூறப்பட்டிருந்தது. (ஆனால், சில வார இதழ்களில் பாமக 7 இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது)
இப்போது திமுகவுக்கு வட மாவட்டங்களில் அனைத்துப பகுதிகளிலும் பலம் அதிகரித்துள்ளதாகவும், தென் மாவட்டங்களில் நகர் பகுதிகளில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாகவும், கிராமப் பகுதிகளில் பலம் ஓங்கியுள்ளதாகவும் புதிய ரிப்போர்ட் தரப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் காங்கிரசுக்கு இடங்களை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி வட மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் காங்கிரசுக்கு அதிக இடங்களைத் தர முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் கொங்கு முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே திமுக வெல்லும் என்பதை திமுகவினரே ஒப்புக் கொள்கின்றனர். இதனால் இந்த ரிஸ்க் பகுதிகளை காங்கிரசிடமே தந்துவிட திமுக திட்டமிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் இடம்பெற்றிருந்தன.
இப்போது இடதுசாரிகள் இல்லை, பாமக நிலைமையும் சந்தேக கேஸாவாகவே உள்ளது. காங்கிரஸ் வேண்டாம் என்று சொன்னாலும் பாமகவை கடைசி நேரத்தில் கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள திமுக தயாராகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு நிலைமை வந்தால் வட மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட்டால் பாமக உதவியோடு அதிக இடங்களைப் பிடிக்க முடியும் என்றும் திமுக கருதுகிறது.
மேலும் தென் மாவட்டங்களில் வென்று வரும் திமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள் என்பதால் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு பலம் சேர்க்கும் வகையில், வட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் திமுக எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்ய திமுக தலைமை வரும்புகிறது.
கடந்த ஒரு வருடமாகவே ஸ்டாலின் அதிக அளவில் வட மாவட்டங்களிலேயே சுற்றுப் பயணம் செய்து வருவதும்,அந்தப் பகுதிகளில் தான் அரசின் நலத் திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி சென்ற ஐவர் குழு:
இந் நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து கட்சி நிர்வாகிகளுடனும் திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியுடனும் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், மாநிலத் தலைவர் தங்கபாலு, ஜெயக்குமார் எம்எல்ஏ ஆகியோர் அடங்கிய குழு இன்று டெல்லி சென்றுள்ளது.
ப.சிதம்பரம் நேற்றே டெல்லி சென்றுவிட்டார். ஜெயந்தி, வாசன், தங்கபாலு, ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தக் குழு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலேசனை நடத்துவிட்டு அடுத்த கட்டமாக திமுகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளது.