கேரள சட்டசபையில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் கேரளா வந்தார். அப்போது அவர் கொச்சியில் சர்வதேச சரக்கு பொட்டக முனைமம் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கேரள அரசை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டதாக விழா மேடையிலேயே முதல்வர் அச்சுதானந்தன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபற்றி கேரள சட்டசபையில் நேற்று விவாதிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஆனந்தன் பேசுகையில், பிரதமர் பங்கேற்ற விழாக்களில் முதல்வர், மாநில அமைச்சர்களை அவமானப்படுத்தியுள்ளார். இதற்காக மத்திய அரசை கண்டித்து இங்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். முதல்வர் அச்சுதானந்தன் பேசும்போது, கொச்சியில் பிரதமர் தங்கியிருந்த ஓட்டலில் நானும், கவர்னரும் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நான் அரசு ஓய்வகத்தில் தங்கியிருந்தேன். கவர்னர் கொச்சி நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு திருவனந்தபுரம் திரும்ப திட்டமி்ட்டிருந்தார். இது பற்றி பிரதமர் அலுவலகத்திற்கு தெரிய வந்து அவரை சமாதானப்படுத்தினர். கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கல்வெட்டில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை என்றார்.
இதனால் சட்டசபையில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் ஒன்றை அமைச்சர் விஜயகுமார் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.