நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அண்ணா சிலை சேதம்-முதியவர் கைது
நெல்லை: நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலையை சேதப்படுத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை உள்ளது. அண்ணாதுரை புத்தகம் படிப்பது போன்று தோற்றம் கொண்ட இந்தி சிலை சிமிண்ட், மண், செங்கலால் அமைக்கப்பட்டது. நேற்று மதியம் முதியவர் ஒருவர் ஆவேசத்துடன் கடப்பாரை கம்பியால் சிலையின் வலது கை, கால் மூட்டுகளை உடைத்து சேதப்படுத்தினார். சாலையில் சென்ற மக்கள், மாநகராட்சி ஊழியர்கள் முதியவரை பிடித்து நெல்லை ஜங்ஷன் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சிவசுப்பு விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் சேரன்மகாதேவி இரட்டைபத்து தெருவை சேர்ந்த சிவபெருமாள் என்றும், இடைகால் புதூர் முத்தாரம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார் என்றும் தெரிய வந்தது. வீட்டிலே சிவபெருமாள் தனியாக வசித்து வருகிறார்.
திமுகவை சேர்ந்த தன்னை அம்பாசமுத்திரத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், தனக்கு நஷ்டஈடு எதுவும் கிடைக்காததால் சிலையை உடைத்து சேதப்படுத்தியதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்போவதாகவும் முன்னுக்கு பின் முரணாக சிவபெருமாள் போலீசிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications