திமுகவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி-ஒரு சீட் ஒதுக்கீடு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார் சரத்குமார். கட்சி தொடங்கிய பின்னர் இதுவரை அவர் ஒரு தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென நாடார் அமைப்புகள் கூடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் நாடார் சமுதாயத்தினரை உள்ளடக்கும் வகையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் தலைவராகவும் சரத்குமார் அறிவிக்கப்பட்டார்.
தேர்தலுக்குப் பின்னர் சமத்துவ மக்கள் கட்சி மாறி, பெருந்தலைவர் மக்கள் கட்சியாக மாறி விடும் என்றும் சரத்குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தக் கூட்டம் நடந்த அடுத்த ஓரிரு நாட்களிலேயே திடீரென ஜெயலலிதாவை சந்தித்து தனது கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்தார் சரத்குமார். மேலும் 2 சீட்களையம் கையோடு வாங்கிக் கொண்டார்.
இது பெருந்தலைவர் மக்கள் கட்சி பிரமுகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. சரத்குமாரின் செயலை கடுமையாக கண்டித்த அவர்கள் கட்சியை விட்டும் நீக்கினர்.
இந்த நிலையில் தற்போது பெருந்தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அக்கட்சியின் நிர்வாகிகளான கரிக்கோல்ராஜ், என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்தனர்.
பின்னர் அவர்களுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படுவதாகவும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அவர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.