கதிர்வீச்சு அதிகரிப்பு: மூடப்பட்டது ஃபுகுஷிமா அணுசக்தி மையம்!
டோக்யோ: ஒன்றன்பின் ஒன்றாக 4 அணு உலைகள் வெடித்ததால், ஏராளமான கதிர்வீச்சை வெளியிட்டு வரும் ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணுசக்தி நிலையத்தை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
இந்த அணு உலைகளின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படுவதாகவும், அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஜப்பான் அரசின் கேபினட் செயலர் யுகியோ இடானோ அறிவித்துள்ளார்.
ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் 3-வது அணு உலை முதலில் சேதமடைந்தது.
அதைத் தொடர்ந்து அந்த அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டது. தற்போது அதில் நீராவி வெளியேறுவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் கதிர்வீச்சின் அளவும் திடீரென புதன்கிழமை மிகவும் அதிகமாக வெளியேறத் தொடங்கியுள்ளது.
அந்த அணுமின் நிலையத்தின் மேலும் 2 அணு உலைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டன. 4-வது அணு உலையில் 2 தீவிபத்துகள் ஏற்பட்டன. 4-வது அணுஉலை கதிரியக்க மூலப் பொருட்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.
அணுமின் நிலையத்தில் வெடிப்புக்குள்ளான 3 அணுஉலைகளின் கலன்களில் இருந்தும் கசிவு இருப்பது தெரியவந்துள்ளது. இது கதிர்வீச்சுக் கசிவின் அபாயம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
அணு உலைகள் வெடிப்பைத் தொடர்ந்து, 3-வது அணு உலையில் இருந்து நீராவி வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கதிர்வீச்சின் அளவு திடீரென அதிகரித்ததாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து 1000 மில்லிசீவர்ட் வரை கதிர் வீச்சு இருந்ததாகவும், பின்னர் அளவு குறைந்து ஒரு மணிநேரத்துக்கு 600-800 மில்லிசீவர்ட் வரை பதிவானதாகவும் இடானோ தெரிவித்தார்.
ஆனால் இன்று திடீரென மீண்டும் 1000 மில்லிசீவர்டுக்கும் அதிகமாக கதிர்வீச்சு வெளியாக ஆரம்பித்துள்ளது. இது பாதுகாப்பாற்ற நிலை என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் காரணமாக சிறிய பணிகளைக்கூட இப்போது பணியாளர்களால் மேற்கொள்ள முடியவில்லை என இடானோ தெரிவித்தார்.
இந்த அணு மின் நிலையத்தில் 750 பணியாளர்கள் பணியாற்றினர். அனைவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அணுமின் நிலையம் இப்போதைக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.