தமிழகத்தில் இதுவரை ரூ. 17 கோடி மதிப்பிலான பணம், இலவச பொருட்கள் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 17 கோடி மதிப்புள்ள பொருட்களும், கணக்கில் காட்டப்படாத ரொக்கமும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று தேர்தல் ஆணையம் ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டது. தமிழகம் எங்கும் போலீசாருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை மாநிலம் முழுவதும் ரூ. 9 கோடி கணக்கில் காட்டப்படாத பணமும், ரூ. 8 கோடி மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டவை.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது,
இது வரை ரூ. 8 கோடி மதிப்பிலான சேலை, வேட்டிகளும், ரூ. 9 கோடி கணக்கில் காட்டப்படாத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது வரை தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் 35 ஆயிரத்து 240 புகார்கள் பதிவு செய்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைக் கேட்டு சுமார் 10 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவை ஆய்வு செய்த பிறகு தகுதியானவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
தேர்தல் செலவுக் கணக்குகளை கண்காணிப்பதற்கு என்று பிற மாநிலங்களில் இருந்து 58 பேர் வந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
இம்முறை செய்தித் தாளில் பணப் பட்டுவாடா நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், நடு இரவில் பணப் பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சிகளை கையும், களவுமாகப் பிடிக்க தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்கிறது.












Click it and Unblock the Notifications