உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பதவி ஏற்றார்!
சென்னை: தமிழக உளவுப் பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அதிகாரிகளுடன் டெல்லியில் தமிழக போலீஸ் அதிகாரிகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழக உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட் 48 நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டார். அவருக்கு பதிலாக புதிய உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனை நியமிக்க தலைமை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டது. அதன்படி டி.கே.ராஜேந்திரன் உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அவர் ஏற்கனவே நிர்வாக பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.கே.ராஜேந்திரனுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
டெல்லியில் ஆலோசனை:
இதற்கிடையில், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், நவீன மயமாக்கல் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் நேற்று காலையில் அவசரமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் இருவரும் நேற்று மாலையில் மத்திய உள்துறை அமைச்சரக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநில போலீஸ் உயர் அதிகாரிகளையும், மத்திய உள்துறை அமைச்சரகம் டெல்லிக்கு அழைத்திருந்தது. இந்த கூட்டத்தில் டி.ஜி.பி. போலாநாத்துக்கு பதிலாக நான் கலந்து கொண்டேன்.
தேர்தல் பாதுகாப்புக்காக மத்திய துணை ராணுவ படை வீரர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் இங்கு பணியாற்றும் துணை ராணுவ படை வீரர்கள் மேற்கு வங்காள மாநிலத்துக்கு செல்கிறார்கள். துணை ராணுவ வீரர்களை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது," என்றார்.












Click it and Unblock the Notifications