தேர்தலில் மக்கள் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்-ஜெயலலிதா
அம்பேத்காரின் 121வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: தேர்தல் கமிஷனின் சிறப்பான நடவடிக்கைகளால் தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில சம்பவங்களை தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். திமுக ஆட்சியின் மீது பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். வாக்குகள் மூலமாக அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தேர்தலில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும்?
பதில்: 2ஜி ஸ்பெக்ட்ரம் மட்டும் அல்ல பல்வேறு ஊழல்களையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்.
கேள்வி: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
பதில்: மே 13ம் வரை காத்திருங்கள்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் 3 கமிஷனர்களில் ஒருவரான ஆந்திரா கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.எஸ்.சம்பத் என்பவர் ஜெயலலிதாவுக்கு சொந்தக்காரர் என்றும், இவர் மூலமாகத் தான் தேர்தல் ஆணையத்தை தனக்கு சாதமாக ஜெயலலிதா வளைத்தார் என்றும் வார இதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.