புதுச்சேரியில் அதிமுக கூட்டணியின் முழு அடைப்பு-இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கை எதிர்த்து அதிமுக கூட்டணி அறிவித்த முழு அடைப்பால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வரிஏய்ப்பு, கறுப்பு பண விவகாரத்தில் கைதாகியுள்ள மும்பை தொழிலதிபர் ஹசன்அலிக்கு பாஸ்போர்ட் கிடைக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் உதவியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் மூன்றுநாளாக விசாரணை நடத்தினார்கள்.
புதுவையில் அரியாங்குப்பத்தில் குருத்துவாரா கட்ட நிலம் ஒதுக்கியுள்ளதிலும் கவர்னர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துக்கின்றனர். மேலும் காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் மருத்துவக்கல்லூரி கட்ட 'தெற்கு அறக்கட்டளைக்கு" அனுமதி அளித்ததிலும் ஆளுநர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இந்த அறக்கட்டளையில் ஆளுநரின் மகன்கள், ஆளுநருக்கு நெருக்கமானவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்தநிலையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி இக்பால்சிங் பதவி விலகக்கோரி புதுச்சேரியில் எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்று (27.04.2011) ஒரு நாள் கடைகள் அடைக்க எதிர்க்கட்சிகள் விடுத்த அழைப்பை ஏற்று காலை ஆறு மணிமுதல் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, காமராசர் சாலையில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட்டும் செயல்படவில்லை. மதுபானக்கடைகள் திறக்கபடவில்லை. அரசு அலுவலகம் மட்டும் இயங்குகின்றன.
வெளியூர் சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் புதுவை கடற்கரை வெறிச்சோடிக் காணப்படுகின்றது. 144 தடை உத்தரவு உள்ளதால் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. அரசு பஸ்கள் சில போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. புதுவையில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.
செய்தி: முனைவர் மு. இளங்கோவன்