வில்லியம் திருமணத்திற்கு மக்கள் வரிப்பணம் வீண்டிப்பு- குற்றச்சாட்டு
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணத்தின் ஆடம்பரச் செலவுக்கு மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேட் மிடில்டனை நாளை மணக்கிறார். இந்த ராஜ திருமணம் நாளை காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடக்கிறது. இது டிஎல்சி தொலைக்காட்சி மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
திருமண அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் உலகமே இதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. இந்த திருமணத்தை காணஏராளமான வெளிநாட்டவர் இங்கிலாந்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சிலர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். திருமணத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் நடந்த ராணுவ அணிவகுப்பை மணமக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த பிரமாண்ட திருமணத்திற்காக அரச குடும்பத்தினர் மக்களின் வரிப்பணத்தை தண்ணீராய் செலவழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ராஜ திருமணத்திற்கு இங்கிலாந்தின் குடியரசு கட்சி மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மணமக்கள் அணியும் மோதிரத்தில் இருந்து உடைகள் வரை பொதுமக்களின் வரிப்பணம் இருக்கிறது என குடியரசுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எமிலி ராபின்சன் என்பவர் கூறுகையில்,
இந்த ஆடம்பர திருமணம் வரி செலுத்துபவர்கள் மீது பெருஞ்சுமையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாளைக்கு 6 பில்லியன் பவுண்டுகள் வரை செலவு செய்து பணத்தை வீணடிக்கிறார்கள். பாதுகாப்பு, மணமக்களின் மோதிரம், உடை இவற்றில் மக்களின் வரிப்பணம் அடங்கியுள்ளது என்றார்.
இதற்கிடையே நாளை ஆடம்பர திருமணத்தைக் கண்டித்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.