கொங்கு மண்டலத்தை ஆட்டிப்படைக்கும் சாயப்பட்டறை பிரச்சினையைத் தீர்க்க ஜெ. அதிரடி நடவடிக்கை
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது தான் மக்களுக்கும், தொழில்துறையினருக்கும் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் துரித கதியில் அமைந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளில் ஏழை நிறைவேற்ற முதல் கட்டமாக உத்தரவிட்ட ஜெயலலிதா தற்போது திருப்பூர், ஈரோடு, கரூரை ஆட்டிப்படைத்து வரும் சாயப்பட்டறை கழிவு நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினை குறித்து தீர்வு காண ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நிதித்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார்.
முதல்கட்டமாக சாயத்தொழில் அதிபர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும், அதைப்போலவே பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், அதன்மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியில் அமர்ந்த நான்காவது நாளிலேயே தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான சாயப்பட்டறைக் கழிவு நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜெயலலிதா களம் இறங்கியிருப்பதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
கழிவு நீர்ப் பிரச்சினை காரணமாக திருப்பூர், ஈரோடு, கரூரில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு அவை மூடப்பட்டுள்ளன. அவற்றுக்கான மின் இணைப்பையும் தமிழக அரசு கடந்த ஆட்சிக்காலத்தில் துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.