சமச்சீர் கல்வி குழப்பம்: அரசின் திடீர் உத்தரவுகளால் சிவகாசி அச்சகங்கள் கலக்கம்
சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்களை அச்சடிக்க தமிழக அரசு டெண்டர் விட்டது. சென்னை, சிவகாசி மற்றும் ஆநதிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அச்சக உரிமையாளர்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டது. சிவகாசியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணியில் 25 அச்சகங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் பழைய பாடத்திட்ட புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை நிறுத்துமாறு சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு பாடநூ்ல் கழகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் அச்சகங்களுக்கு வந்து பழைய புத்தகங்களை மீ்ண்டும் அச்சடிக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பழைய புத்தகங்களை அச்சடிக்கும் பணி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது.
முதலில் நகல் பிரதிகள் (புரூப் காப்பிகள்) அச்சடிக்கும் பணி நடக்கின்றன. இந்த பணி இன்று அல்லது நாளைக்குள் முடியும். அதன் பிறகு அச்சடிக்கும் பணி தொடங்கும். புத்தகங்களை வேகமாக அச்சடித்தால் குறைந்தது 10 முதல் 15 நாட்கள் வரை ஆகும் என அச்சக உரிமையாளர்கள் தெரிவித்தனர். உயர் நீதிமன்றத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில் தீர்ப்பு எப்படி வருமோ என்று அச்சக உரி்மையாளர்கள் கலத்தில் உள்ளனர்.