தீவிரவாதிகளை பிடிக்க அமெரிக்காவை சார்ந்திருக்கக் கூடாது! - மணிசங்கர அய்யர்
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாம் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக் கூடாது என முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் கூறினார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்பில்லை எனக் கூறி ராணாவை சிகாகோ நீதிமன்றம் கடந்த வாரம் விடுவித்தது. ஆனால், டென்மார்க்கில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பாவுக்கு ராணா பொருளுதவி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
நமது நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அமெரிக்காவை நாம் சார்ந்திருக்கக் கூடாது.
நீதித்துறையை நான் மதிக்கிறேன். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை வைத்தே ராணாவை நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. ஆனால், பயங்கரவாத சம்பவ வழக்கில் டேவிட் ஹெட்லியை எதிரியாகச் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் முற்றுப்பெற வேண்டுமானால், பாகிஸ்தானுடன் தடைபடாத, தடைப்படுத்தப்படாத தொடர் பேச்சுவார்த்தை அவசியம்," என்றார் மணிசங்கர் அய்யர்.