அஞ்சுகிராமம் அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை
அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் பஞ்சாயத்து துணை லைவர் ஏசு அமலதாசன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் ஜேமஸ்டவுன், பிச்சை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ஏசு அமலதாசன் (40). அகஸ்தீஸ்வரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணை செயலாளராகவும், அஞ்சுகிராமம் பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்தார். அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
நேற்றிரவு ஜேம்ஸ்டவுண் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள ரோட்டில் அமலதாசன் இரண்டு கைகளும் துண்டாக்கப்பட்டு, உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட அமலதாசனுக்கு அன்னாள் ரெஜி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர் அஞ்சுகிராமம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்திருந்தார். அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்.
கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு அவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்ய முயன்றது. ஆனால் அதில் இருந்து தப்பிவிட்டார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசியல் பகைவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலித் பஞ்.தலைவிக்கு சரமாரிவெட்டு-உயிர் ஊசல்:
நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராம பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது கணவர் பொய்யாமணி, மின்சார வாரியத்தில் பணியாற்றுகிறார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக பஞ்சாயத்தில் தலைவராக இருந்தாலும் பல்வேறு தரப்பினரின் அரசியல், ஜாதி ரீதியாகஅடக்குமுறைகளை கிருஷ்ணவேணி சந்தித்தார். அவரை அந்த பொறுப்பில் இருக்கவிடாமல். போராட்டங்களையும் நடத்தினர்.
இந் நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார். வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்தஅவர் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உயிர் ஊசலாடுகிறது. சம்பவம் குறித்துசங்கர்நகர் போலீசார் விசாரித்துவருகின்றனர்.