லோக்பால் மசோதா தொடர்பான சர்ச்சைகள் அனைத்தும் நாடகமே-மாயாவதி
லக்னோ: லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கும், ஊழல் ஒழிப்பு இயக்கத்தினருக்கும் இடையே நடப்பது மிகப் பெரிய நாடகம் என்று வர்ணித்துள்ளார் உ.பி. முதல்வர் மாயாவதி.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கும், ஊழில் ஒழிப்பு இயக்கத்தினருக்கும் இடையே நடந்து வரும் வாதங்கள், பிரதிவாதங்கள், மோதல்கள், போராட்டங்கள் அனைத்துமே ஒரு நாடகம். இந்த நாடகம் எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பது தெரியவில்லை.
லோக்பால் மசோதா தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, அதை நிறைவேற்ற, மக்களிடம் போய் ஊழல் ஒழிப்பு இயக்கத்தினர் பிரசாரம் செய்ய வேண்டும்.
2014ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்கு சாதகமான எம்.பிக்களைத் தேர்வு செய்யுங்கள் என்று மக்களிடம் போய் இவர்கள் பிரசாரம் செய்ய வேண்டும். பிறகு தங்களுக்கு விருப்பமான முறையில் மசோதாவை இவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும்.
தற்போதைய நிலையில் அவர்கள் நினைப்பது நடக்காது. இந்த மசோதாவை மத்திய அரசு வழக்கம் போல தூக்கி கிடப்பில் போடத்தான் போகிறது. ஊழல் ஒழிப்பு இயக்கத்தினர் விருப்பப்படி எதுவுமே நடக்கப் போவதில்லை.
எனவே, இப்போதுள்ள அரசை நம்பாதீர்கள். 2014ம் ஆண்டு தேர்தலில் மக்களுக்கு சாதகமான எம்.பிக்களைத் தேர்வு செய்யுமாறு கூறி மக்களிடம் போய் அறிவுரை சொல்லுங்கள். உங்களுக்கு தோதான எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் மசோதாவை நிறைவேற்ற முயலுங்கள் என்றார் மாயாவதி.