புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் இயங்கலாம்-உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையிட முடியாது. புனித ஜார்ஜ் கோட்டையில் அரசின் தலைமைச் செயலகம் இயங்குவதைத் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக அரசு அமைந்ததும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது. திமுக அரசின் காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தில் போதிய வசதிகள் இல்லை. துறைகளை முழுமையாக இடமாற்றம் செய்ய முடியாத அளவுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மோசமாக உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா இதற்குக் காரணம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அரசின் முடிவை எதிர்த்து பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை நடத்திய உயர்நீதிமன்றம், இன்று தனது உத்தரவைப் பிறப்பித்தது.
பொது நலன் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற பெஞ்ச், அரசின் கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையிட முடியாது. எனவே புனித ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைச் செயலகம் மாற்றியதை தடை செய்ய முடியாது என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.