கள்ளப் பணத்தால் நாடு மூழ்கடிக்கப்படுகிறது - தா.பாண்டியன் குற்றச்சாட்டு
கோவை : இந்தியாவில் அரசு வங்கிகள் மூலம் உள்ள பணப் புழக்கத்தை விட சட்ட விரோதமாக 200 மடங்கு பணம் புழக்கத்தில் உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை நிலை ஆளுநர் சக்கரவர்த்தி கூறியுள்ளார். அப்படியானால் கள்ளப் பணத்தால் நாடு மூழ்கடிக்கப்பட்டு விட்டது என்று தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
இந்தியாவில் அரசு வங்கிகள் மூலம் உள்ள பணப் புழக்கத்தை விட சட்ட விரோதமாக 200 மடங்கு பணம் புழக்கத்தில் உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை நிலை ஆளுநர் சக்கரவர்த்தி கூறியுள்ளார். அப்படியானால் கள்ளப் பணத்தால் நாடு மூழ்கடிக்கப்பட்டு விட்டது என்று தான் அர்த்தம்.
இந்தியாவில் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விற்றதால் பெற்ற பணத்தைவிட மத்திய அரசின் மூலம் பெற்ற மானியத் தொகை மிக அதிகம்.
லஞ்ச ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் இந்திய நீதித்துறையால் தண்டிப்பது எளிதல்ல.
விலைவாசி ஏற்றம் என்பது, பற்றாக்குறையால், வியாபாரப் போட்டியால் உயர்த்தப்படுவதைவிட காட்டிலும், அரசு கடை பிடித்த தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம்.
மேலும், தமிழகத்தின் புதிய ஆட்சியால் அறிவிக்கப்பட்ட சட்டங்கள், நிறை வேற்றப்பட்ட திட்டங்கள், சில தீர்மானங்கள் வரவேற்கத் தகுந்தவை. அதே போல் கேபிள் டிவி ஒளிபரப்பை அரசுடமை ஆக்குதல் முடிவை உடனே செயல்படுத்த வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். மதுரை தினகரன் அலுவலக எரிப்பில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கைக்கு மத்திய அரசாங்கம் இனியாவது நிதிஉதவி, ஆயுத உதவி செய்வதை நிறுத்தவே தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது ஒரு பொருளாதார முற்றுகைக்காக ராஜதந்திரமாக தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த தீர்மானம்.
இப்போதாவது இக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். இல்லைஎனில் இனப்படுகொலை நடத்திய இரண்டாவது குற்றவாளிகளாக மத்திய அரசை கருத நேரிடும் என்றார்.












Click it and Unblock the Notifications