கங்கையைக் காக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சாமியார் விஷம் வைத்துக் கொலை?

நிகமானந்த்தின் ரத்த மாதிரியை ஆய்வு செய்த ஆய்வகம் தயாரித்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிகமானந்தின் மரணத்திற்குக் காரணம் பூச்சிக் கொல்லி மருந்து என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த லால் பாத் லேப்ஸ் என்ற ஆய்வகத்தின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நிகமானந்த்தின் ரத்தத்தில் அதிக அளவில் டாக்ஸின் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு ஆர்கனோபாஸ்பேட் என்ற பூச்சிக் கொல்லி மருந்தே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.
மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுதான் அவரது உடலில் இந்த விஷம் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இருப்பினும் நிகமானந்த் உடல் சத்துக் குறைவு மற்றும் செப்டிசீமியா காரணமாகவே உயிரிழந்ததாக நிகமானந்த்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஏப்ரல் 27ம் தேதி ஹரித்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நிகமானந்த். பின்னர் மே 4ம் தேதி அவரை ஹிமாலயன் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு மாற்றினர். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை, டெல்லி லால் பாத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். அந்த ஆய்வில்தான் இது தெரிய வந்துள்ளது.
கங்கைக் கரைப் பகுதியில், ரிஷிகேஷத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மணல் அள்ளத் தடை விதிக்கக் கோரியும், கங்கையை அழிவிலிருந்து காக்கக் கோரியும் உண்ணாவிரதம் இருந்து வந்தார் நிகமானந்த். பாபா ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை முடித்த மறு நாள் அவர் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
நிகமானந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications