தமிழ் தேசியக் கூட்டணிக்கு மீண்டும் திரும்பும் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா
வவுனியா: இலங்கை அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலின்போது சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற டெலோ தலைவர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் மீண்டும் கூட்டணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
ஈழத்தில் பல லட்சம் பேரைக் கொன்று குவித்து முடித்த பின்னர் அதிபர் தேர்தலை நடத்தினார் ராஜபக்சே. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக, ஈழப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக பலியா காரணமான ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்து வந்த சரத் பொன்சேகா எதிர்த்துப் போட்டியிட்டார்.
இதையடுத்து பொன்சேகாவை ஆதரிக்க தமிழர் கட்சிகள் பலவும் முடிவு செய்தன. இந்த நிலையில் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெலோ தலைவர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் பிரிந்து சென்று தனியாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.
இந்த நிலையில் தற்போது தங்களது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் தமிழ் தேசியக் கூட்டணிக்குத் திரும்ப இந்த இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் வர வேண்டும் என்று கோரி டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் இந்த இரு தலைவர்களையும் வற்புறுத்தி வந்தனர். மேலும், டெலோ அமைப்பின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் எம்.பியாக இருப்பவருமான செல்வம் அடைக்கலநாதனுடன் இவர்கள் பேசவும் ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து தற்போது தமிழ் தேசியக் கூட்டணியில் இணைய சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் முடிவு செய்துள்ளனர்.
சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழ் தேசியக் கூட்டணிக்குத் திரும்பியுள்ளது கூட்டணியை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.