சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி அதிகரிப்பு: மக்களே உஷார்
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொள்ளை நகரமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்க விலை உயர்வைப் பார்த்தால் இனி ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகிவிடும் போல் உள்ளது. இந்நிலையில் சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் தனியாக நடந்து சென்ற யூசுப் அகமது என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளனர். அதற்குள் அந்த வழியாக போலீசார் ரோந்து வரவே அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடி எஸ்.எம். நகரைச் சேர்ந்த கார்த்திக்(24) என்று தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் உள்ளன. தப்பியோடிய கார்த்திக்கின் தம்பி முரளியை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் சென்னை அசோக் நகரில் மணிமொழி என்பவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகையை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். மேலும் யானைக்கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
பஞ்சு அருணாச்சலம் மகளிடம் சங்கிலி பறிப்பு
பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ரா விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அருகே நடந்து செல்கையில் வாலிபர் ஒருவர் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் இருந்த 8 பவுன் செயினை பறித்துச் சென்றார்.
தனியாக செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பெண் வேடமிட்டுச் சென்று கொள்ளையடிப்பது, முகவரி கேட்பது போல நகைகளைப் பறித்துச் செல்கின்றனர். வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மக்கள் வெளியே தெரியாதபடி நகைகள் அணிய வேண்டும். திருட்டு நகைகள் என்று தெரிந்தும் அதை வாங்கும் அடகுக் கடைக்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.