முந்திரி இறக்குமதி செய்வதாக ரூ.3 கோடி கடன் பெற்று மோசடி: ஓய்வு பெற்ற விஏஓ கைது
நாகர்கோவி்ல்: தான்சானியாவில் இருந்து குமரிக்கு முந்திரிக்கொட்டை இறக்குமதி செய்வதாகக் கூறி ரூ.3 கோடி மத்திய அரசு நிறுவனத்திடம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி மறைமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
மத்திய அரசுக்கு சொந்தமான பிஇசி (புராஜெக்ட் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன்) நிறுவனம் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. சென்னை ஆயிரம்விளக்கி்ல் இதன் கிளை உள்ளது. இந்நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழிலுக்கு கடன் வழங்குகிறது. கடந்த 2004-05ல் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் இரவிபுதூர்கடையில் செயல்பட்டு வந்த யூனிவர்சல் புட் என்ற உணவு தயாரிப்பு நிறுவனம் தான்சானியா நாட்டில் இருந்து முந்திரிக் கொட்டைகளை இறக்குமதி செயவதற்காக ரூ.3 கோடி கடன் வாங்கியது.
இதற்காக ரூ.5 கோடிக்கான ஆவணங்களை சமர்ப்பித்து கேரளாவைச் சேர்ந்த நீலகண்டன் நாயர், ராமசந்திரன் பிள்ளை ஆகியோர் இந்த கடன் தொகையை பெற்றனர்.
கப்பல் மூலம் தான்சானியாவில் இருந்து கொண்டு வந்த முந்திரி கொட்டைகளை நடுக்கடலிலேயே வேறு நிறுவனத்திற்கு விற்று பணத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால் குடோனில் முந்திரி கொட்டைகள் வைத்திருப்பதாகக் கூறி வந்தனர். ரூ.3 கோடி கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை. பிஇசி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அவர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பிசிஇ சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இது குறித்து விசாரணை நடத்த குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதன் பேரில் நடந்த விசாரணையில் நீலகண்டன் நாயர், ராமசந்திரன் ஆகியோர் கணேசன் என்பவர் மூலம் முந்திரிக்கொட்டைகளை குடோனில் வைத்திருப்பதாக போலி ஆவணம் தயாரித்தது தெரிய வந்தது. இதன் பேரில் அவர்கள் 3 பேர் மீதும் தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் என 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். இதில் கணேசனை கைது செய்து இருக்கிறோம். இவர் குமரி மாவட்டம் மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஏஓ ஆவார். மேலும் 3 பேரை தேடி வருகிறோம் என்றார்.