சமையல் கேஸ் மானியம் ரத்து இப்போதைக்கில்லை! - ஜெய்பால் ரெட்டி
மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, மானியத்தை குறைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
அதன்படி, ஆண்டுக்கு 4 முதல் 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் (அதாவது தற்போதைய விலையில்) வழங்கப்படும். அதற்கு மேல் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கு சந்தை விலைக்கு (அதாவது சிலிண்டருக்கு ரூ.666) வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
சொந்தமாக வீடு, கார் அல்லது இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மற்றும் வருமானவரி செலுத்தும் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த கட்டுப்பாடு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "சமையல் எரிவாயுவுக்கு மானியத்தை ரத்து செய்யும் திட்டம் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "கேஸுக்கு மானியம் வழங்குவதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி (ஒரு நாளைக்கு ரூ.67 கோடி) இழப்பு ஏற்பட்டு வருகிறது. டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6.61-ம், மண் எண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ.24.63-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.270-ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதை சமாளிப்பதற்காக கூடுதல் நிதி உதவி வழங்கும்படி நிதி அமைச்சகத்தை வற்புறுத்தி வருகிறோம். பெட்ரோலிய பொருட்களுக்கு மானியத்தை ரத்து செய்யும் யோசனை குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 18-ந்தேதி அன்று கூடுவதாக இருந்தது.
ஆனால், அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இந்த குழு மீண்டும் எப்போது கூடும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இது உணர்வுப்பூர்வமான ஒரு அரசியல் முடிவாகும். மக்கள் உணரும் வகையில் அவர்களுக்கு அறிவுறுத்தி சம்மதிக்க வைக்கும் வரை இதுபோன்ற மகிழ்ச்சியற்ற முடிவுகளை எடுக்க முடியாது'', என்றார்.