இமாம் அலி கூட்டாளிகள் உருவாக்கிய அல் முன்தாமீன் படை- ஜெ.வுக்கும் குறியா?
மதுரை: இமாம் அலியை சுட்டுக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பதற்காக 'அல் முன்தாமீன் படை' என்ற தனிப்படை உருவாக்கப்பட்டு ரகசியமாக அது செயல்பட்டு வருவதாகவும் அந்தப் படையினர்தான் தற்போதைய அத்வானி குண்டுவைப்பு விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் ஒரு தகவல் கூறப்படுகிறது. மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இந்தப் படையினர் குறி வைத்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஒரு மனுவில், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே பெங்களூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் தான் அங்கு செல்ல இயலாத நிலை உள்ளதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் தனது மனுவில் இமாம் அலியைக் கொன்றவர்களைப் பழிதீர்ப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் அல் முன் தாமீன் படை என்ற ரகசிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கைதாகியுள்ள பலரும் இமாம் அலியின் ஆதரவாளர்கள் என்பதால், இந்தப் படையைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2002ம் ஆண்டு பெங்களூரில் பதுங்கியிருந்த இமாம் அலியை தமிழக போலீஸ் படையினர் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த அல் முஜாஹிதீன் என்ற அமைப்புக்கும், தற்போது கைதாகியுள்ளவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் ஒரு போலீஸ் தகவல் தெரிவிக்கிறது. பிலால் மாலிக் இந்த படையுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவர் மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிதாஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அப்போது இவருக்கு 17 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்களுக்கும், எந்தெந்த அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பெரிய அளவிலான சதித் திட்டமாகவும், பெரிய அளவில் ரகசிய அமைப்பாக இவர்கள் இயங்கி வந்ததும் தெரிய வந்துள்ளதால், ஏற்கனவே மதுரையில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரித்த முன்னாள், இன்னாள் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு பெரிய அளவில் மதுரை போலீஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.