வன்னியர் சங்கத்துக்காக காடுவெட்டி குரு வசூலித்த பணம் எங்கே?- கேட்கிறார் வேல்முருகன்
வேலூர்: வன்னியர் சங்கத்தின் பெயரில் ஆண்டுக்கு பல கோடி வசூல் செய்கிறார் காடுவெட்டி குரு. ஆனால் சங்கம் ரூ. 134 கோடி நஷ்டத்தி்ல இருப்பதாக கூறுகிறார். அப்படியானால் அவர் வசூலித்த பணம் எங்கே போனது என்று கேட்டுள்ளார் பாமகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள வேல்முருகன்.
இதுகுறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே டாக்டர் ராமதாஸுக்கு விசுவாசமாக இருந்தேன். கூட்டணி அமைவதற்காகவும், வன்னியர் சமுதாயத்துக்காக உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களுக்கு அனுமதி பெறுவதற்கும் தன்மானத்தை இழந்தேன்.
வன்னியர் சங்கத்துக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் காடுவெட்டி குரு வசூலிக்கிறார். ஆனால், அறக்கட்டளை ரூ. 134 கோடி நஷ்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படியெனில் குரு வசூலித்த தொகை எங்கே போனது?
கட்சியின் வரவு, செலவு கணக்கை எந்த பொதுக் குழுவிலோ, நிர்வாகக் குழுவிலோ காட்டியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நான் என்ன முடிவை எடுக்கப் போகிறேன் என கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னணி நிர்வாகிகள், வன்னியர் சங்கத்துக்காக உழைத்தவர்கள் கேட்டு வருகிறார்கள்.
வேட்புமனு தாக்கலின்போது, எனது சொத்து மதிப்பு ரூ. 1 கோடி என பதிவு செய்துள்ளேன். எனது மூதாதையர் 2 ஆயிரம் காணிக்கு சொந்தக்காரர்கள். அத்தகைய சூழலில் நான் வாட்ச்மேனாக இருந்ததாகவும், எனது தந்தைக்கு 4 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்ததாகவும் கூறி டாக்டர் ராமதாஸ் என்னை அவமானப்படுத்தியுள்ளார்.
இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வாங்கித் தர முடியவில்லை. அவர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டித் தருவதாக அன்புமணி ராமதாஸ் கூறியதை நிறைவேற்றவில்லை.
கட்சிக்கு விசுவாசமாக இருந்த என்னை வெளியேற்றியதற்காக நீதி கேட்டு மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்வேன் என்றார் அவர்.