மாலத்தீவில் நாளை சார்க் மாநாடு- கிளம்பினார் மன்மோகன்- கிலானியுடன் பேசுகிறார்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய 7 தெற்காசிய நாடுகள் இணைந்து தங்களுக்குள் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தின. இதற்கு சார்க் அமைப்பு என்று பெயர்.
இந்த அமைப்பில் பார்வையாளர் நாடாக ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சார்க் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. 17-வது தடவையாக மாலத்தீவில் உள்ள அட்டு தீவில் வியாழன் (10-ந்தேதி), மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க நான்கு நாட்கள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் மலேசியா புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் மற்றும் உயரதிகாரிகள் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு
இந்த மாநாட்டில் ஏழு நாட்டு பிரமர்களும் பங்கேற்கின்றனர். சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வியாழக்கிழமை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு குறித்து பேசப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்து வழங்குவது பற்றி பிரதமர் கிலானியுடன் மன்மோகன் சிங் பேச்சு நடத்துகிறார்.
அதற்கு முன்னோட்டமாக இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் ரஞ்சன் மத்தாஸ் (இந்தியா), சல்மான் பஷீர் (பாகிஸ்தான்) ஆகியோர் புதன்கிழமை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது பேச்சு வார்த்தை திருப்தி கரமாக இருந்ததாக இரு தரப்பிலும் கூறப்பட்டது. கிலானி தவிர சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் மற்ற நாட்டு தலைவர்களையும் பிரதமர் மன் மோகன்சிங் சந்திக்க உள்ளார்.
நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமரின் இப்பயணத்தின் போது 4 ஒப்பந்தங்கள் போடப்படவுள்ளன. பேரிடர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பரிமாற்றம், சார்க் விதை வங்கி உருவாக்கம் ஆகியன இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்கவையாகும். 2002-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மாலத்தீவுக்கு சென்று வந்த பின்னர் , இப்போதுதான் இந்தியப் பிரதமர் ஒருவரின் பயணம் நடைபெறவுள்ளது.
மாலத்தீவுகளின் நாடாளுமன்றமான மஜ்லிஸில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றவுள்ளது பயணத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தப் பயணத்தின் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் தொடர்புகள் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.