இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி விலகினார்-ரோமில் மக்கள் கொண்டாட்டம்
நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த தனது ராஜினாமா உதவும் என்று பெர்லுஸ்கோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக மகா 'காம மன்னனாக' திகழ்ந்தவர் பெர்லுஸ்கோனி. விபச்சார அழகிகளுடன் அவர் போட்ட ஆட்டமும், கொட்டமும் இத்தாலியின் பெயரை உலக அளவில் நாறடித்து விட்டது. இருந்தாலும் தனது காம லீலைகள் குறித்து அவர் ஒருபோதும் வெட்கப்பட்டதே கிடையாது. இதெல்லாம் எனது தனிப்பட்ட விஷயங்கள் என்று கூறி வந்தார். ஆனால் சமீபத்தில் அவரது காம லீலைகள் பெரும் சர்ச்சையாகி வழக்குகளும் தொடரப்பட்டன.
இதையடுத்து பெர்லுஸ்கோனி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன. ஆனாலும் அவர் அதை சட்டைசெய்யவில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரம் மகா மோசமாக நலிவடைந்து விட்டதைத் தொடர்ந்து பெர்லுஸ்கோனிக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்தன.
சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில் பெரும்பான்மையைப் பெறத் தவறினார் பெர்லுஸ்கோனி. இதையடுத்து தான் பதவி விலகப் போவதாக அவர் அறிவித்தார்.அதன்படி தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.
பெர்லுஸ்கோனியின் ராஜினாமாவையடுத்து ரோம் நகரில் கொண்டாட்டங்கள் வெடித்துள்ளன. பெர்லுஸ்கோனி எதிர்ப்பாளர்கள் கூடி அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான பெர்லுஸ்கோனி எதிர்ப்பாளர்கள் ரோம் நகரில் மோட்டார் சைக்கிள்களில் பேரணி நடத்தி பெர்லுஸ்கோனியின் ராஜினாமாவை வரவேற்றனர்.
தனது ராஜினாமா குறித்து பெர்லுஸ்கோனி கூறுகையில், எனது ராஜினாமாவால் இத்தாலியின் நலிவடைந்த பொருளாதாரம் தலை நிமிரும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
அடுத்து புதிய அரசை அமைக்கும் முயற்சிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணியை முன்னாள் ஐரோப்பிய ஆணையர் மரியோ மொன்டி மேற்கொள்வார் என்று தெரிகிறது.