உர விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு முக அழகிரி கடிதம்!
இதுகுறித்து மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:
டி.ஏ.பி. மற்றும் பொட்டாஷ் உரங்கள் விலை ஏற்றத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். டி.ஏ.பி. உரங்கள் 90 சதவீதமும் மற்றும் பொட்டாஷ் உரங்கள் 100 சதவீதமும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
எனவே உலக சந்தையில் இந்த உரங்களின் விலையை பொறுத்து அதே விலையில் இந்தியாவில் விற்கப்பட வேண்டி உள்ளது. பழைய தள்ளுபடி திட்ட உரக்கொள்கையில் விவசாயிகளுக்கு உரங்களை தகுந்த விலையில் வழங்கவும், தொழிற்சாலைகளுக்கு அவர்களின் முதலீடுகளுக்கு ஏற்ப வருவாய் ஈட்டித் தரவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
மேலும் பழைய உரக்கொள்கையில் டி.ஏ.பி. பொட்டாஷ் மற்றும் காம்ளக்ஸ் உரங்களுக்கு அதிகபட்ச உரவிலையை அரசே நிர்ணயித்து அதற்கு தகுந்தாற்போல் மானியங்கள் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு தகுந்த விலையில் உரங்கள் வழங்கப்பட்டன.
கடந்த வருடம் நிதி அமைச்சர் அவர்கள், ஊட்டச்சத்துக்கேற்ற உரமானிய கொள்கையை டி.ஏ.பி. பொட்டாஷ் மற்றும் காம்ளக்ஸ் உரங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த கொள்கையின் மூலம் மேலே கூறப்பட்ட உரங்களுக்கான அரசு மானியம் ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் அதிகபட்ச உரவிலையை முடிவு செய்ய உற்பத்தியாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கையில் நான் உடன்பாடு கொண்டிருக்கவில்லை. எனினும் இக்கொள்கையின் மூலம் கடந்தாண்டு கேபினட் கூட்டத்தில் உரங்களுக்கான விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்தாண்டு உலகளவில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் சரியான முறையில் போதுமான அளவிற்கு இந்தியாவில் உரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
மேலும் உலகளவில் இந்த உரங்கள் மற்றும் இந்த உரங்களின் மூலப்பொருட்கள் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படாததாலும் இந்த உரங்களின் விலை அதிகமாக ஏறி கொண்டிருக்கிறது. மேலே கூறப்பட்டவையை கருத்தில் கொண்டு கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட என்.பி.எஸ். கொள்கையை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என எனது துறையை கேட்டு கொண்டுள்ளேன்.
மேலும் அதிக அளவில் அரசு மானியம் பெறவும், இந்த உரங்களின் அதிகபட்ச சிலையை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், பிரதமருக்கும் கடிதம் எழுத உள்ளேன். இதன் விளைவாக உரங்களின் விலை விரைவில் கட்டுப்பாட்டில் வரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.