பெரிய பதவிக்கு ஆசைப்பட்ட சந்தோஷ் ஹெக்டே எனக்கெதிராக சதி செய்தார்: எதியூரப்பா குற்றச்சாட்டு
ஷிமோகா: மத்திய அரசில் முக்கியப் பதவியைப் பிடிப்பதற்காக லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எனக்கு எதிராக சதி செய்தார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தார் அப்போதைய லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. அந்த அறிக்கையில் அப்போதைய முதல்வராக இருந்த எதியூரப்பாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனால் அவரின் முதல்வர் பதவி பறிபோனது.
இந்நிலையில் சந்தோஷ் ஹெக்டே மத்திய அரசில் முக்கியப் பதவி ஒன்றைப் பெறுவதற்காக தனக்கு எதிராக சதி செய்தார் என்று எதியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த சதித் திட்டத்தில் யார், யாருக்கெல்லாம் பங்கு உண்டு என்பதை ஹெக்டே வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
2000ம் ஆண்டு முதல் கர்நாடகத்தில் நடந்த சுரங்க ஊழல்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு ஹெக்டேவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவரோ என் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றி மட்டுமே விசாரணை நடத்தினார். எனக்கு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. அறிக்கையை சமர்பிக்கும் முன்பே ஹெக்டே அவ்வப்போது செய்தியாளர்களுக்கு சில தகவல்கள் கொடுத்தார். இதற்கெல்லாம் என்ன காரணம்?
லோக் ஆயுக்தாவின் ஊழல் குறித்து அதன் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்திருந்தது தொடர்பாக ஹெக்டே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விதான் சௌதாவில் உட்கார்ந்து கொண்டு ஊழல் பற்றி பேச அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை. அவர் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.