பஸ் பாஸ்களின் விலை 2 மடங்காக உயர்வு-ஏற்கனவே பாஸ் வாங்கியவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒரேயொரு முறை பாஸ் எடுத்து நாள் முழுவதும் (இரவு 10 மணி வரை) எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்வதற்கான டிக்கெட்டின் விலை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாராந்திர பஸ் பாஸ் விலை ரூ.100ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.600ல் இருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மட்டும் போய் வருவதற்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.140ல் இருந்து ரூ.240 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட பஸ் பாஸ்களின் விலை ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு பயணிகளின் பார்வைக்காக அனைத்து பஸ் டெப்போக்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
மாத பஸ் பாஸ் ஏற்கெனவே வாங்கியவர்கள் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் கூடுதல் தொகை செலுத்தி சீல் வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அந்த பாஸை பயன்படுத்தி மாநகர பஸ்களில் பயணிக்க முடியும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.