மேலும் 200 விமானங்கள் 'கட்'! - கிங்ஃபிஷருக்கு மத்திய அரசு சம்மன்
குளிர்காலத்தில் விழாக்கள் அதிகம் என்பதால், பயணிகள் வசதிக்காக 418 விமான சேவையை ஆபரேட் செய்து வந்தது கிங்ஃபிஷர். ஆனால் கடன் சுமை மற்றும் நஷ்டத்தைக் காரணம் காட்டி இவற்றில் 200 விமான சேவையை ரத்து செய்துள்ளது.
இதன் மூலம் 4 லட்சம் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிங்ஃபிஷருக்கு மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ஜெனரல் சம்மன் அனுப்பியுள்ளார்.
கிங்ஃபிஷரின் இந்த பொறுப்பற்ற செயலால் தவிப்புக்குள்ளாகும் பயணிகளுக்கு மாற்றுத் திட்டம் என்ன என்றும் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில்விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாட்டின் விமானப் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது கிங்ஃபிஷர். அதாவது மாதத்துக்கு 8 முதல் 9 லட்சம் பயணிகள் கிங்ஃபிஷரில் பயணிக்கின்றனர். இப்போது 200 விமானங்களை ரத்து செய்ததன் மூலம், 4 லட்சம் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள். அதனால் கிங்ஃபிஷரின் மாற்றுத் திட்டம் என்ன என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும்," என்றார்.
பணம் தராமல் இழுத்தடிக்கும் கிங்ஃபிஷர்
இன்னொரு பக்கம், சக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள், ரத்து செய்யப்படும் கிங்ஃபிஷர் விமானப் பயணிகளை ஏற்றிக் கொள்ள மறுக்க ஆரம்பித்துள்ளன.
காரணம், இந்தப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தை கிங்ஃபிஷர் தரமாமல் இழுத்தடிக்கிறதாம். கிங்ஃபிஷரின் தலைமை நிறுவனமான யுபி குழுமமும் இதற்கு உத்தரவாதம் தர மறுக்கிறதாம். எனவே இனி கிங்ஃபிஷர் பயணிகளை ஏற்றமாட்டோம் என சக விமான நிறுவனங்கள் கூற ஆரம்பித்துள்ளன.
எனவே விமான நிலையங்களில் கிங்ஃபிஷர் விமான நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் இடத்தை வேறு நிறுவன விமானங்களுக்கு உடனடியாக மாற்றித் தரவும் விமானப் போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.