ரூ 3 லட்சம் லஞ்ச வழக்கு - முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டு சிறை

1996-ல் தனியார் நிறுவனத்துக்கு கான்ட்ராக் வழங்கியதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சுக்ராமுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பைக் கேட்ட சுக்ராம் தனக்கு 86 வயது ஆகிவிட்டதால், தண்டனையை குறைத்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சுக்ராமின் கோரிக்கையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 1996ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் சுக்ராம். அப்போது தமது துறை சார்ந்த ஒப்பந்தம் ஒன்றை, ஹரியானா டெலிகாம் லிமிடட் என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கினார்.
ரூ.30 கோடி மதிப்புள்ள அந்த ஒப்பந்தத்தை அளிப்பதற்கு, ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த 1998-ல் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த 15 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.சி. பாண்டே, சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதையடுத்து, சுக்ராம் உடனடியாக திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக, தனக்கு 85 வயதாகிறது என்பதால், இதனை கருத்தில் கொண்டு கருணைகாட்டும்படி, சுக்ராம் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
சுக்ராம் மீது தாக்குதல்
தீர்ப்பு வெளியான உடன் சுக்ராமை நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கினார் ஒரு இளைஞர். அவர் பெயர் ஹர்விந்தர் சிங். உடனடியாக போலீசார் அந்த இளைஞனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். எதற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தினார் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications