மண்டல தலைவர் தேர்தல்-திமுகவுக்கு வாக்களித்த சென்னை அதிமுக கவுன்சிலர்கள்-அதிர்ச்சியில் அதிமுக!
ஆளுங்கட்சியாக இருக்கின்ற நிலையிலும், சற்றும் பயப்படாமல், அணி மாறி வாக்களித்த அதுவும் திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்களால் அந்த கட்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூரும் ஒன்று. இது ஏழாவது மண்டலமாகும். இங்கு திமுகவுக்கு 4 கவுன்சிலர்களும், அதிமுகவுக்கு 10 கவுன்சிலர்களும் உள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினர் உள்ளார்.
இந்த மண்டலத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் மனு செய்தார். அதிமுக சார்பில் அலெக்சாண்டர் நிறுத்தப்பட்டார். இதையடுத்து வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போது 15 உறுப்பினர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். பின்னர் வாக்குகளை எண்ணியபோது திமுக வேட்பாளருக்கு 8 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 7 வாக்குகளும் கிடைத்தன. இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்தது. வெறும் 4 உறுப்பினர்களே உள்ள திமுகவுக்கு 8 வாக்குகள் கிடைத்ததால், 4 அதிமுக கவுன்சிலர்கள் அணிமாறி வாக்களித்தது உறுதியானது.
10 கவுன்சிலர்களை கையில் வைத்திருந்தும் பரிதாபமாக தோற்றதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சி்த் தலைவர் சுபாஷ் கூறுகையில், அதிமுக ஆட்சியின் அராஜக போக்கு அக்கட்சியினருக்கே பிடிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.
பின்னர் வெற்றி பெற்ற ஜோசப் சாமுவேலை தூக்கி்க கொண்டு திமுகவினர் வெளியே வந்தபோது அவர்களுடன் மோதுவது போல அதிமுகவினர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இரு தரப்பையும் கலைந்து போகச் செய்தனர்.
தற்போது அணி மாறி வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் குறித்து கட்சி மேலிடத்திற்கு புகார்கள் பறந்துள்ளன. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
திமுகவுக்கு வாக்களித்த 4 அதிமுக கவுன்சிலர்கள் பதவி பறிப்பு-ஜெ. அதிரடி:
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல தலைவர் தேர்தலில் அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவுக்கு வாக்களித்ததாகக் கூறி 4 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இரவோடு இரவாக கட்சி தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலத்திற்கான தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் மாநகராட்சியில் உள்ள 60 கவுன்சிலர்களும் வாக்களித்தனர். கிழக்கு மண்டலத்தில் 33வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதி்முக கவுன்சிலர் வீரபாகு 8 வாக்குகள் பெற்று தோல்வியைடந்தார்.
தெற்கு மண்டலத்தில் 52வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அலெக்சாண்டர் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கவுன்சிலர் தவசி வேல் 6 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வடக்கு மண்டலத்தில் 3வது வார்டு அதிமுக கவுன்சிலர் கோகிலா 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கவுன்சிலர் மாடசாமி 7 வாக்குகள் பெற்று தோல்வியைடந்தார்.
மேற்கு மண்டலத்தில் அதிமுக கவுன்சிலர் வெள்ளப்பாண்டியும், திமுக வேட்பாளர் ஆனந்தராஜும் தலா 7 வாக்குகள் பெற்றிருந்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் முன்னிலையில் சீட்டு குலுக்கி போடப்பட்டது. அதன் அடிப்படையில் வெள்ளைப்பாண்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் அதிமுகவுக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். எனவே 4 மண்டலத்தையும் அதிமுக கைப்பற்றும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்த நேரத்தில் 2 மண்டலத்தை திமுக கைப்பற்றியது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து 20வது வார்டு கவு்ன்சிலர் ஆஸ்டின், 24வது வார்டு கவுன்சிலர் கித்தேரியம்மாள், 25வது வார்டு கவுன்சிலர் சந்திராவின் கணவர் செல்லப்பா, 45வது வார்டு கவுன்சிலர் குமார் ஆகிய 4 பேரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது.