போளூரில் சமையல் கேஸ் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது
திருவண்ணாமலை: போளூரில் சமையல் கேஸ் கேட்டு திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஒரு தனியார் கேஸ் ஏஜென்சி உள்ளது. இந்த ஏஜென்ஸி போளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்களை அனுப்பி வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக சிலிண்டர் கேட்டு பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு மேல் ஆகியும் சிலிண்டர் வழங்கவில்லை.
இதனால் பொது மக்களை அந்த ஏஜென்சியை தொடர்பு கொண்டு கேட்ட போது, சென்னையில் உள்ள அலுவலகத்தில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால், இங்கு சப்ளை செய்யப்படவில்லை என்று காரணம் கூறினர்.தற்போது வேலை நிறுத்தம் முடிந்துவிட்ட நிலையிலும் பல்வேறு காரணங்களை கூறி கேஸ் சிலிண்டர்கள் வழங்காமலேயே இருந்துள்ளனர். மேலும் சிலிண்டர்களை நிர்ணயிக்கப்பட்ட விலைவிட ரூ. 50 முதல் ரூ. 150 வரை அதிகமாக விற்பனை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த ஏஜென்சி அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை 11 மணி அளவில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் போளூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை போளூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் உடனே திருவண்ணாமலை-வேலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் பொது மக்கள் கலைந்து செல்லாததால் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications