நூறு சதவிகித மானியத்தில் நவீன கரும்பு உற்பத்தி திட்டம் – ஜெ. அறிவிப்பு
இது குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கரும்பு, மூலப் பொருளாக உள்ளது. கரும்பிலிருந்து சர்க்கரை, வெல்லம், மின்சாரம், காகிதம், கால்நடை தீவனம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. கரும்பின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலமும், செலவுகளை குறைப்பதன் மூலமும் கரும்பு விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்பதை கருத்தில் கொண்டு, 'நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்" என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து சரியான அளவு ஊட்டச் சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெறமுடியும். மேலும், விதைக் கரும்பு தேவையும், தண்ணீர் தேவையும் பெருமளவில் குறையும். எனவே, இந்த ஆண்டு 7500 ஏக்கர் பரப்பில் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு, அதற்காக ரூ12 கோடியே 93 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
5 கோடி செலவு
இத்திட்டம் நிழல்வலை நாற்று தயாரிப்பு முறை, ( Shade net nursery) சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் கரும்பு விளைச்சலுக்கான ஆதாரம், பயிற்சி, ஆகிய முக்கிய அம்சங்களைக் கொண்டது. நிழல்வலை நாற்று தயாரிப்பு முறையின் மூலம் கரும்பு பயிருக்கான நாற்று உற்பத்தி செய்யப்படும். 7500 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட உள்ள நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்திற்கு தேவைப்படும் கரும்பு நாற்றுகள் 1000 நிழல்வலை நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்படும். இது கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்காக அரசு 5 கோடி ரூபாய் செலவிடும்.
நூறு சதவிகித மானியம்
கரும்பு உற்பத்தியை பெருக்குவதற்கான சொட்டுநீர் பாசன கருவிகளை நிறுவுவதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். கரும்பு உற்பத்திக்காக தேவைப்படும் சொட்டு நீர் வழி உரம் மற்றும் கரும்பு வளர்ச்சி ஊக்கிகள் (Sugarcane booster) வாங்குவதற்காக விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 10,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் கீழ் துல்லிய பாசன முறை மற்றும் நிழல் வலை நாற்றங்கால்களை உருவாக்க தேவையான தொழில் நுட்பம், ஆகியன பற்றி விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் விரிவான பயிற்சி அளிக்கப்படும்.