'டேம் 999': நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்ப திமுக, அதிமுக திட்டம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை முன் வைத்து தமிழகத்துக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள "டேம் 999' திரைப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்ப திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டுள்ளன.தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இவர் இந்திய கடற்படையில் பணியாற்றியவர் ஆவார். இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது.இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.
இந்தப் படத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதிமுக, நாம் தமிழர், பாமக ஆகியவை இந்தப் படத்துக்கு தேசிய அளவில் தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளன.
கேரள அரசும், ஜக்கிய அரபு அமீரகமும் இணைந்து பணம் போட்டு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந் நிலையில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்பவும், கேரள அரசின் சதிச் செயல் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறவும் திமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே "டேம் 999' படமே எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னனியில் கேரள அரசின் தலையீடு உள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று அலுவல் ஆய்வுக் குழுவில் திமுக வலியுறுத்தியுள்ளது என்றார்.
அதிமுக எம்பி தம்பிதுரை கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.