பாராளுமன்றத்தை முடக்கினால் பொருளாதாரம் முடங்கிவிடும்! - மன்மோகன் சிங்
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை முடக்கினால் நாட்டின் பொருளாதாரமும் முடங்கிப் போகும் அபாயம் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அவர் கூறுகையில், "முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சர்வதேச பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இந் நிலையில் இந்தியா திறம்பட செயல்படாவிட்டால் நமது நாடும் அதே பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும். மிக முக்கியமான மசோதாக்கள் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. அந்த மசோதாக்களை நிறைவேற்றி செயல்படுத்தினால்தான் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும்.
இதை எதிர்க்கட்சிகள் புரிந்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சிகள் பொறுப்பாக செயல்பட வேண்டும். எந்தப் பிரச்னை என்றாலும் அது குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
'ப சிதம்பரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் செய்வது சரியல்ல'
2 ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை தொடர்புபடுத்தி, அவரை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது சரியல்ல. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக செயல்பட எந்த முகாந்திரமும் இல்லை. கற்பனையான புகார்களின் பேரில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்," என்றார்.