அமளி துமளியுடன் நடந்த 'கிரேட்டர்' சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம்
சென்னை: கிரேட்டர் சென்னையின் முதல் மாமன்ற கூட்டம் இன்று தொடங்கியது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் சில பிரச்சினைகளை எழுப்பியபோது அதிமுகவினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.
விரிவு படுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியின் ( கிரேட்டர் சென்னை ) முதல் கூட்டம் இன்று நடந்தது. மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும், மேயர் சைதை துரைசாமி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பின்பு, மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றிக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் சைதை துரைசாமி சபையில் வாசித்தார்.
பிரச்சினை எழுப்பிய எதிர்கட்சிகள்
எதிர்கட்சித் தலைவர் சுபாஷ் பேசும் போது, மாநகராட்சியின் மேயராக ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியம் இருந்தபோது அவை கூட்டம் சரியாக 10 மணிக்கு தொடங்கப்படும் என்றும், ஆனால் இன்று அவை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படாமல் 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
மேலும், 15 நாட்களாக பெய்த மழையால் சாலைகள் சேதமைடைந்துள்ளன என்றும், அவற்றை மாநகராட்சி சீரமைக்கவில்லை என்றும் அவர் கூறினார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி நிவாரண உதவிகளை வழங்கவில்லை என கூறி எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்யபோவதாக அறிவித்தார்.
இதையடுத்து, அவரை அதிமுக உறுப்பினர்கள் தாக்கினர். உறுப்பினர்கள் சிலர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.