மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை - தமிழகத்தில் மறுபடியும் மழை பெய்யும்
சென்னை: இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை சற்றே ஓய்ந்து சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக வெயிலடிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரில் கடந்த இரண்டு தினங்களாக சூறாவளி காற்றால்,கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. நேற்றிரவு வீசிய சூறாவளி காற்றால் குமரி மாவட்டத்தில், கடுக்கரை, பூதப்பாண்டி, புதுக்குளம் உள்ளிட்டப்பகுதிகளில் 5ஆயிரம் வாழை மரங்கள் இரண்டாக முறிந்து சாய்ந்துள்ளன. குலைத்தள்ளிய நிலையில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மீண்டும் மழைக்கு வாய்ப்பு
இதனிடையே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் தமிழகத்தில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால், திருவள்ளூரில் அதிகபட்சமாக தலா 4 செமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications