உண்ணாவிரதத்தின்போது ஹோட்டலுக்குப் போகக் கூடாது மக்களே!- தொண்டர்களுக்கு விஜயகாந்த் அட்வைஸ்!
கூட்டணி அரசியலுக்கு வந்த பின்னர், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பின்னர், அந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்த பின்னர் முதல்முறையாக பெரும் போராட்டம் ஒன்றை நாளை நடத்துகிறது தேமுதிக. பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை தேமுதிகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
சென்னையில் விஜயகாந்த் தலைமையிலும் மாவட்டத் தலைநகரங்களில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும் போராட்டம் நடைபெறுகிறது. இதை மாபெரும் வெற்றிப் போராட்டமாக்க தேமுதிகவினர் தீவிரமாகியுள்ளனர்.
சென்னையில் நடைபெறும் போராட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு முன்பு நடைபெறுகிறது. கோயம்பேடு பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தேமுதிக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அது மறுக்கப்படவே, கட்சித் தலைமை அலுவலகம் முன்பே நடத்தத் தீர்மானித்துள்ளனர். இது தனியார் இடம் என்பதால் போலீஸ் அனுமதி தேவை இல்லை என்பதால் இந்த முடிவு.
இந்தப் போராட்டத்திற்கு குறைந்தது 20 ஆயிரம் பேரையாவது திரட்டிக் காட்ட வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். சென்னையில் இப்படி ஒரு உண்ணாவிரதம் நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்.
உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக விஜயகாந்த், கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் மச்சான் சுதீஷ், நிர்வாகிகள் பார்த்தசாரதி, ராஜன், யுவராஜ் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இந்த ஆலோசனையின்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அவை மாவட்டச் செயலாளர்களுக்கு அவசரமாக பாஸ் செய்யப்பட்டதாம். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
மாவட்டத் தலைநகரங்களில் நடக்கும் போராட்டத்திற்கு குறைந்தது 10 ஆயிரம் பேரையாவது கூட்டிக் காட்ட வேண்டும். போராட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளர்களையே சாரும்.
உண்ணாவிரதப் போராட்டம் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெற வேண்டும்.
உண்ணாவிரதத்தின்போது இடையில் அப்படியே நைஸாக நழுவி அருகில் இருக்கும் கடைகளுக்குப் போய் டீ சாப்பிடுவது, போண்டா வடை போன்றவற்றை சாப்பிடுவது என்ற பேச்சே இருக்கக் கூடாது. ஹோட்டல்கள் முன்புகூடி, பத்திரிக்கையாளர்கள் பார்வையில் பட்டு செய்தியாகி கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று விஜயகாந்த் கட்சியினருக்குக் கட்டளை இட்டுள்ளாராம்.
இதையடுத்து இதுவரை இல்லாத பிரமாண்ட உண்ணாவிரதம் என்ற பெயரைத் தட்டிச் செல்வதற்காக படு துரிதமாக ஏற்பாடுகளில் குதித்துள்ளனர் கேப்டனின் கேடர்கள்.