என் நிலத்தை அபகரிச்சுட்டாங்கோ சாமீ!: திமுக நிர்வாகி மீது நரிக்குறவர் புகார்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள ரூபநாராயணநல்லூரைச் சேர்ந்த நரிக்குறவர் ஒருவர் தனக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை திமுக பிரமுகர் ராமசாமி என்பவர் அபகிரித்துக் கொண்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ரூபநாராயணநல்லூரில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 42 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் 10 குடும்பத்திற்கு கடந்த 1987ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி தமிழக அரசு இலவச மனைப்பட்டா வழங்கியது.
அதில் அப்பகுதியைச் சேர்ந்த குறவன் நலமுன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் பாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு 1.83 ஏக்கர் நிலத்திற்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டது.
அந்த நிலத்தில் பாஸ்கரும், அவரது மனைவியும் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 1992ம் ஆண்டு கம்மாபுரத்தைச் சேர்ந்த தற்போதைய கம்மாபுரம் திமுக ஒன்றிய தலைவரும், கம்மாபுரம் ஊராட்சித் தலைவருமான ராமசாமியிடம் ரூ.12,000க்கு 3 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட்டார்.
குத்தகைக்கு எடுத்த நிலத்தை ராமசாமி அபகரித்துக் கொண்டதாக பாஸ்கர் கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு மீட்புக் குழு இன்ஸ்பெக்டர் ரவீந்திரனிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ராமசாமி தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.