தெலுங்கானா இயக்கத்தின் மூலம் போராளியாகி மேற்கு வங்கத்தில் முடிந்த கிஷன்ஜி
ஹைதராபாத்: மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் கிஷன்ஜி கொல்லப்பட்டிருப்பது மாவோயிஸ்ட் இயக்கத்தினரையும், அதன் ஆதரவாளர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிறப்பால் தெலுங்கரான கிஷன்ஜி, தெலுங்கானா போராட்டத்தின் மூலம் போராட்ட வாழ்க்கைக்கு வந்தவர் ஆவார்.
1956ம் ஆண்டு ஜூலை மாதம், ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் பிறந்தவர் கிஷன்ஜி. இவரது உண்மையான பெயர் மல்லோஜுலா கோட்டீஸ்வரர ராவ் என்பதாகும்.
இவருக்கு கிஷன்ஜி என்ற பெயர் தவிர பிரஹலாத் உள்ளிட்ட மேலும் பல பெயர்களும் உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் லால்கர் பகுதியை மையமாக கொண்டு செயல்பட்டு வந்தார் கிஷன்ஜி.
பிஎஸ்சி படித்துள்ள கிஷன்ஜி, மாணவப் பருவத்திலிருந்தே போராட்டக் குணம் மிக்கவராக விளங்கினார். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி போராடி வந்த தெலுங்கானா சங்கர்ஷ் சமிதி அமைப்பில் இணைந்து போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர் 1974ம் ஆண்டு மக்கள் போர்ப்படை என்ற நக்சலைட் குழுவில் இணைந்து செயல்படத் தொடங்கினார். அவசர கால நிலை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தலைமறைவு வாழ்க்கைக்கு மாறினார்.
அப்போதுதான் அவர் புரட்சிகர நபராக மாறிப் போனார். ஆயுதப் புரட்சியே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மோட்சம் தரும் ஒரே வழி என்ற நம்பிக்கைக்கு மாறினார். இத்தனைக்கும் இவரது தந்தை காங்கிரஸ்காரர் ஆவர். சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. இருப்பினும் அவசர நிலை அறிமுகப்படுத்தப்பட்டதை கடுமையாக சாடிய கிஷன்ஜியின் தந்தை, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியை உதறினார். ஆனாலும் ஆயுதப் பாதையை அவர் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.
பிறப்பால் பிராமணரானாலும் கூட கிஷன்ஜிக்கு ஜாதி, மதத்தின் மீது சுத்தமாக நம்பிக்கை கிடையாது. சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதையே ஒரே கொள்கையாக வைத்திருந்தார்.
1977ம் ஆண்டு ஆந்திராவில் இவர் நடத்திய மிகப் பெரிய விவசாயிகள் இயக்கம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 60,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதில் பங்கேற்றனர். பின்னர் இதே போன்ற போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்தது. அப்போதுதான் கிஷன்ஜி பிரபலமானார்.
மக்கள் போர்க்குழுவும், இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையமும் இணைந்து சிபிஐ மாவோயிஸ்ட் என்ற ஒரே அமைப்பாக மாற கிஷன்ஜியும் ஒரு முக்கியக் கருவியாக இருந்தார். அந்த இணைப்புக்குப் பின்னர் அவர் மாவோயிஸ்ட் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
ஆரம்பத்தில் ஆந்திராவிலும், பின்னர் மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் செயல்பட்டு வந்த கிஷன்ஜி, சில ஆண்டுகளுக்கு முன்புதான் மேற்கு வங்கத்திற்கு இடம் பெயர்ந்தார். இவரது மனைவி சுஜாதாவும் ஒரு மாவோயிஸ்ட்தான்.