மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பு- எதிர்த்து தமிழக அரசு அப்பீல்!
சென்னை: மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என்ற தனி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது தமிழக அரசு. இந்த உத்தரவை எதிர்த்து பணியாளர் சங்கங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. அதைத் தொடர்ந்து அரசு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி கே.சுகுணா உத்தரவிட்டார்.
சங்க உறுப்பினர்களுக்கு உடனடியாக பணி வழங்குவதோடு, அது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதியைக் கொண்ட டிவிஷன் பெஞ்சில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த டிவிஷன் பெஞ்ச், மக்கள் நலப் பணியாளர்கள் சங்கங்களின் வழக்கின் இறுதி விசாரணையை 24-ந் தேதி நடத்த வேண்டும் என்று தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
பணி நியமன உத்தரவு
அதைத் தொடர்ந்து புதன்கிழமை நீதிபதி கே.சுகுணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கியதற்கான அறிக்கை பற்றி நீதிபதி கேட்டார். இதுதொடர்பாக அரசின் கருத்தை அறிந்து பதில் தெரிவிக்க ஒரு நாள் கால அவகாசம் வேண்டுமென்று தமிழக அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு நீதிபதி கே.சுகுணா தள்ளி வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அட்வகேட் ஜெனரல், அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்ய உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
சங்கங்களின் தரப்பில் வாதிட்ட வக்கீல் வைகை, அதற்கும் இந்த கோர்ட்டில் நடக்கும் விசாரணைக்கும் சம்பந்தமில்லை. இறுதி விசாரணையை 24-ந் தேதி நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை என்பதால், இறுதி விவாதம் நடத்தலாம்' என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் இறுதி விவாதம் நேற்று தொடங்கியது. இறுதி விவாதத்தை வக்கீல் வைகை தொடங்கினார். விவாதம் முடிவுராத நிலையில், அடுத்த கட்ட விசாரணையை 29-ந் தேதிக்கு நீதிபதி கே.சுகுணா தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications