சசிகலாவுக்கு கண்ணில் பிரச்சனை, ஆங்கிலம் தெரியாது, சுதாகரனுக்கு உடம்பு சரியில்லை!
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேற்று அவரது தோழி சசிகலாவிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருந்தது. ஆனால், சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும், இதனால் வழக்கை 8 வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் வரவழைத்து வாக்குமூலம் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு 4 நாட்கள் பதில் அளித்தார். சுமார் 1,339 கேள்விகளுக்கு பதில் தந்தார்.
பெங்களூர் மாநகராட்சி அருகே உள்ள சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள தனி நீதிமன்றத்தில் சசிகலாவிடம் விசாரணை நடக்க இருந்தது. முன்னதாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவரிடம் விசாரணை முடிந்துவிட்டதால், சிட்டி சிவில் கோர்ட் வளாகத்திலேயே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் விசாரணைகள் நடக்கவுள்ளன.
நேற்று சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட இருந்தன. ஆனால், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகி, ஜெயலலிதா உட்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மனு தாக்கல் செய்தனர். இதில் ஜெயலலிதாவின் மனுவை ஏற்ற நீதிபதி, மற்றவர்கள் ஏன் ஆஜராகவில்லை? என்று கேட்டார்.
சசிகலாவுக்கு கண்ணில் பிரச்சனை, சுதாகரனுக்கு உடல் நலம் சரியில்லை, இளவரசிக்கு சர்க்கரை நோய் அதிகமாகி விட்டது என்று அவர்களது வழக்கறிஞர்கள் கூறினர்.
சசிகலாவின் வழக்கறிஞர் சந்தான கோபால் தாக்கல் செய்த சிறப்பு மனுவில், சசிகலா 10ம் வகுப்பு வரை மட்டுமே அரசு பள்ளியில் படித்துள்ளதால், அவருக்கு போதிய ஆங்கில அறிவு இல்லை. ஆகவே, அவரிடம் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தமிழில் தயாரித்து கொடுக்க வேண்டும். மொழி பெயர்ப்பு செய்வதற்கு வசதியாக விசாரணையை 8 வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை காலதாமதம் செய்யும் நோக்கத்தில் இந்த கால அவகாசத்தை கேட்கிறார்கள். ஆங்கிலம் தெரியாது என்றால் விசாரணை நடைபெறும்போது இங்கேயே ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கூறியுள்ளது. எனவே, எதிர்தரப்பு தாக்கல் செய்துள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சசிகலாவிடம் தமிழில் கேள்விகள் கேட்க, மொழி பெயர்ப்பாளராக ஹரீஷ் நியமனம் செய்யப்படுவார் என்று அறிவித்து, வழக்கை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் சசிகலா கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஹரீஷ் தான் முன்பு இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.