சிறையை விட்டு வெளியேறும் முன் சக கைதிகளுக்கு டிவி, இனிப்பு கொடுத்த கனிமொழி

2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்தார் திமுக எம்பி கனிமொழி. கடந்த திங்கட்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் நேற்று இரவு 7.30 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
முன்னதாக அவர் தன்னுடன் சிறையில் இருந்த சக பெண் கைதிகளைத் தழுவி, அவர்களுக்கு சிறை கேன்டீனில் இனிப்பு வாங்கிக் கொடுத்து தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும் சிறையில் இருக்கையில் தான் பயன்படுத்திய டிவியை சக கைதிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். வெளியே வருகையில் சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கனிமொழி திகாரை விட்டு வெளியே வரும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.
கனிமொழியை எதிர்பார்த்து சிறை வாசலில் பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். அதனால் அவர் வேறு வழியாக வெளியே வந்தார். திமுக எம்பி டிஆர் பாலு, எம்.பி.யும் கனிமொழியின் சகோதரருமான அழகிரி, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழியின் கணவர் அரவிந்தன் உள்ளிட்டவர்கள் திகார் வாசலில் கனிமொழியை வரவேற்றனர்.
வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கனிமொழி சென்னைக்கு செல்கிறார். அங்கு கனிமொழி வருகையை விழாவாகக் கொண்டாட திமுக ஏற்பாடுகள் செய்து வருகின்றது.












Click it and Unblock the Notifications