இலவச மின்சாரம் பெற 6ம் தேதி கறிக்கோழி பண்ணைகளில் கருப்புக் கொடி போராட்டம்
கோவை: இலவச மின்சாரம் கோரி வரும் 6ம் தேதி கறிக்கோழி பண்ணைகளில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த கறிக்கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கறிக்கோழிப் பண்ணையாளர்கள் சங்க கூட்டம் அதன் மாநில தலைவர் மூர்த்தி தலைமையில் அன்னூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது,
உரம் விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு, விளைபொருள் விலை குறைவு ஆகியவற்றால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு உபதொழிலாக உள்ளது. கறிக்கோழிப் பண்ணைக்கு தேவைப்படும் மஞ்சி, கரி விலை 2 மடங்காக உயர்ந்துவிட்டது. பண்ணைத் தொழிலாளர்கள் கூலியும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே கறிக்கோழி வளர்ப்பில் போதிய லாபம் கிடைக்கவில்லை என்றார்.
கூட்டத்தின் முடிவில் இலவச மின்சாரம், கறிக்கோழி வளர்ப்புக்கான தொகை உயர்த்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 6ம் தேதி அனைத்து கறிக்கோழி பண்ணைகளிலும் கருப்புக் கொடி கட்டுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் மார்க்கண்டசாமி மற்றும் கறிக்கோழி பண்ணையாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.