மத்திய அரசுக்கு நெருக்குதலை அதிகரிக்க உண்ணாவிரத்தில் குதிக்கும் கேரள அமைச்சர்கள்!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்க வலியுறுத்தி 2 கேரள அமைச்சர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரான பி.ஜே.ஜோசப் டெல்லியிலும், நிதியமைச்சர் கே.எம்.மணி, இடுக்கியிலும் உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர்.
மத்திய அரசு முல்லைப் பெரியாற்றின் குறுக்கே உள்ள தற்போதைய அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட அனுமதி தர வேண்டும் என்று கேரள அரசு கோரி வருகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக எந்த உத்தரவாதமும் தரவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் பன்சால், புதிய அணையால் தமிழகத்திற்குப் பலன் கிடைத்தால் கட்டி விட்டுப் போகட்டுமே என்று கூறியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தநிலையில் மத்திய அரசுக்கு நெருக்குதல் தரும் வகையில், புதிய அணைக்கு அனுமதி கோரி ஜோசப்பும், மணியும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
இதற்கிடையே, கேரள அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.