நிலநடுக்கம் குறித்த கேரளாவின் புகார் உண்மையா- அணையில் ஆய்வு நடத்த நிபுணர் குழு முடிவு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதால் அணைக்கு பேராபத்து இருப்பதாக கேரள அரசு கூறியுள்ள புகாருக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது. மேலும் கேரளா சொல்வது, உண்மையா, பொய்யா என்பதை அறிய முல்லைப் பெரியாறு அணைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தவும் நிபுணர் குழு தீர்மானித்துள்ளது.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் இடம் பெற்றுள்ளார்.
இந்த குழு முல்லைப் பெரியாறு அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளது. பல்வேறு குழுக்களிடம் ஆய்வறிக்கையை கோரியுள்ளது. இவை அனைத்தும் கிடைத்த பின்னர் தனது அறிக்கையை ஜனவரி மாத இறுதியில், உச்சநீதிமன்றத்தில் இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது.
கேரள புகாருக்கு பதிலளிக்க தமிழகத்திற்கு அனுமதி
இந்த நிலையில், இக்குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது கேரள அரசு தாக்கல் செய்திருந்த நிலநடுக்கம் தொடர்பான புகார் மனுவுக்குப் பதில் அளிக்க அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கபப்ட்டது.
கேரள அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், முல்லைப் பெரியாறு அணை உள்ள பகுதியில் நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இதனால் அணைக்கு ஆபத்து உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதை மறுத்த தமிழக தரப்பு, இதுகுறித்து விளக்கம் அளிக்க அனுமதி கோரியது. இதை ஏற்ற ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு 10 நாட்களுக்குள் தனது விளக்கத்தை தமிழக அரசு தாக்கல் செய்யலாம் என்று கூறி அனுமதி அளித்தது.
ஜன. 2, 3ல் இரு தரப்பு வக்கீல்கள் வாதம்
மேலும் இரு மாநில வக்கீல்களும் விவாதம் நடத்த கோரி நிபுணர் குழுவிடம் மனு கொடுத்தனர். இதையும் ஏற்ற நிபுணர் குழு, வருகிற ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரு மாநிலங்களும் தத்தமது வாதங்களை முன்வைக்கலாம் என்று அனுமதி அளித்தது.
நேரில் ஆய்வு செய்ய முடிவு
மேலும் நிலநடுக்கம் தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்துள்ள புகாரின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்யவும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உண்மையிலேயே அணைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக நேரடியாக அணைக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விரைவில் நிபுணர் குழுவின் 2 உறுப்பினர்கள் அணைக்குச் சென்று ஆய்வு நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள கோரிக்கை நிராகரிப்பு
இன்றைய கூட்டத்தின்போது பல்வேறு குழுக்கள் அளித்துள்ள ஆய்வறிக்கை நகல்களை தங்களுக்குத் தர வேண்டும் என்று கேரள அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை நிபுணர் குழு தலைவர் ஏ.எஸ்.ஆனந்த் நிராகரித்து விட்டார்.
நான்கு மணி நேரம் நடந்த கூட்டம்
நான்கு மணி நேரம் நடந்த இன்றைய கூட்டத்தின்போது பல்வேறு குழுக்கள் அணையின் பாதுகாப்பு குறித்து சமர்ப்பித்துள்ள ஆய்வறி்க்கைகள் பரிசீலிக்கப்பட்டன.