அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும்-காங்கிரஸ்
சென்னை: முல்லைப் பொரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. தீர்ப்பு வரும் வரை இரு மாநிலங்களில் உள்ள தலைவர்களும் கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இது பற்றி நான் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தி உள்ளேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.
அம்பேத்கார் நினைவு நாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ஞானதேசிகன்,
முல்லைப் பொரியாறு அணை விவகாரம் இரு மாநில உணர்வுகள் சம்பந்தமானது. இதில் எக்காரணத்தைக் கொண்டும் வன்முறைக்கு இடம் அளிக்கக் கூடாது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நிச்சயமாக நல்ல தீர்ப்பு வரும். எல்லோரும் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதுவரை இரு மாநிலங்களில் உள்ள தலைவர்களும் கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இது பற்றி நான் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தி உள்ளேன்.
தமிழ்நாட்டு மக்கள் கேரளாவில் வசிக்கின்றனர். அதேபோல் கேரள மக்களும் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். எனவே இவர்கள் 2 பேரின் நல்லுறவும் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.
அணு மின் நிலையத்தை திறக்கக்கோரி இளங்கோவன்- ஞானதேசிகன் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்கோரி அகில இந்திய தொழிலாளர் முன்னணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஞானதேசிகன் பேசுகையில்,
காற்றாலை, நீர் மின்சக்தி போன்றவற்றால் நாட்டின் மின் பற்றாக்குறையை போக்க முடியாது. இந்தியாவில் 20 அணு மின் நிலையங்களே உள்ளன. இவற்றில் இருந்து 3 சதவீத மின் சக்தியை நாம் பெறுகிறோம்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஓர் அணு உலையில் 100 சதவீதப் பணிகளும் மற்றொரு அணு உலையில் 95 சதவீதப் பணிகளும் முடிந்துவிட்டன.
இந்த இரு அணு உலைகளும் செயல்படத் தொடங்கினால் 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதில் 975 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும். இந்த மின்சாரத்தையும் விட கூடுதலாக தமிழகத்துக்கு மின்சாரம் வேண்டும் என்றாலும் அதையும் பெற்றுத்தர காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்.
அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களின் பின்னணி என்ன, அவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பாக புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் முழுமையாக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் என்றாலும் அதை தமிழக காங்கிரஸ் பெற்றுத் தரும். இதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்றாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.