பெட்ரோல் விலை மீண்டும் உயர்கிறது.. 65 பைசா அதிகரிக்கும்
டெல்லி: பெட்ரோல் விலையை 65 பைசா உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை செய்து வருகின்றன.
இந்தியாவில் அவ்வப்போது மாறும் விஷயங்களில் பெட்ரோல் விலையும் ஒன்றாகிவிட்டது. பெட்ரோல் விலை கடந்த சில மாதங்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த 1ம் தேதி தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 பைசா குறைந்தது. இந்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 65 பைசா உயர்த்த எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இது குறித்து நாளை முடிவு செய்யப்படுகிறது. பெட்ரோல் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்க அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அவ்வாறு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால் வரும் 16ம் தேதி முதல் புது விலை அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.22 குறைந்தது. அதையடுத்து கடந்த 1ம் தேதி 78 பைசா குறைக்கப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்படவிருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால் பெட்ரோல் விலை உயர்ந்தால் எதிர்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.