மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் பாஸ்போர்ட் கோரி நேரடியாக விண்ணப்பிக்க புதிய வசதி
சென்னை: முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பாஸ்போர்ட் பெற நேரடியாக விண்ணப்பிக்க புதிய வசதிகள் செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை, சாலிகிராமத்தில் பானுகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விண்ணப்ப எண்ணை பெற்று கொள்ள வேண்டும்.
அந்த விண்ணப்ப எண், விண்ணப்பிக்கும் நபரின் அசல் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை செலுத்தலாம். இந்த வசதி சாலிகிராமம் பாஸ்போர்ட் மையத்தில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இதேபோல தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற நேரடியாக விண்ணப்பிக்கும் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் வாழ்க்கை துணை, 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறவும் இந்த புதிய வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் பாஸ்போர்ட் புதுப்பிக்க தாம்பரம் துரைசாமி ரெட்டி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் முன்பதிவு செய்யாமல் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க வருவோர் காவல்துறை சான்று, இ.சி.என்.ஆர்., வாழ்க்கை துணை சேர்ப்பு, முகவரி மாற்றம், திருமணத்திற்கு பிறகு பெயர் சேர்ப்பு, கூடுதல் பக்கங்கள் இணைப்பு, 3 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் ஆகிய சேவைகளுக்கு நேரடியாக பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.